2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியச் செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் சிறப்பாகவும், விரைவாகவும், பன்முகப்படுத்தப்பட்ட வகையிலும் முன்னெடுத்தமைக்காக, திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி மட்டக்களப்பில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் (SVIAS) நடைபெற்றது.
நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களினால் வழங்கப்பட்ட முதலிடத்திற்கான விருதை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர், சம்பந்தப்பட்ட விடய உத்தியோகத்தர்களுடன் இணைந்து பெற்றுக்கொண்டார்.
மக்களுக்கான சேவைகளை வினைத்திறனுடனும் துரிதமாகவும் வழங்குவதில் பிரதேச செயலகம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், அலுவலகத்தின் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு, ஒருங்கிணைந்த செயற்பாடு மற்றும் குழு முயற்சிக்குக் கிடைத்த முக்கியமான வெற்றியாகக் கருதப்படுகிறது.
ஜனாதிபதி நிதியத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள் மற்றும் நிதியுதவிகளை மக்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்ப்பதில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியதன் மூலம், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் இந்த மாவட்ட மட்ட சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, மாவட்ட மட்டத்தில் அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற ஏனைய பிரதேச செயலகங்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

