சுவிச்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவரும், அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரும் கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை இந்த வாரம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, இரு இராஜதந்திரிகளும் கிழக்கு மாகாணத்திலுள்ள உயர்மட்ட அரச அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களுடன் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டனர்.
அந்த வகையில், அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) அமைப்பின் சார்பில் பணிப்பாளர் திரு. கண்டுமணி லவகுசராசா மற்றும் பிரதிப் பணிப்பாளர் திரு. அழகுராசன் மதன் ஆகியோர் சுவிச்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவரை கடந்த ஜூன் 10 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து கலந்துரையாடினர்.
அதேவேளை, ஜூன் 11 ஆம் திகதி மட்டக்களப்பில் இடம்பெற்ற மற்றுமொரு சந்திப்பில், அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருடனும் AHRC பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.
இவ்விரு சந்திப்புகளின் போதும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் மனித உரிமைச் சவால்கள், காணி உரிமைப் பிரச்சினைகள், வாழ்வாதார மீட்புத் தேவைகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான எதிர்பார்ப்புகளும் இவ்விரு வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான ஆவணம் ஒன்றையும் AHRC பிரதிநிதிகள் கையளித்தனர்.
கிழக்கு மாகாண மக்களின் உரிமைகள், வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் நிலையான சமாதானம் தொடர்பான விடயங்களை சர்வதேச மட்டத்தில் எடுத்துரைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இச்சந்திப்புகள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


