திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச் பே கடற்கரையோரத்தில் செயல்பட்டு வந்த சிற்றுண்டிச்சாலையின் சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டு, வழங்கப்பட்ட தற்காலிக அனுமதிக்கேற்ப புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரட்ரிக் கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரை வளாகத்திற்குள் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த உணவகக் கட்டிடம் புதன்கிழமை (18) இரவு முதல் அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கரையோர பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய அனுமதிக்கு இணங்க குறித்த பகுதியில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விகாரையின் விகாராதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக, 127 சதுர அடியில் தற்காலிக கடை அமைப்பதற்கே கரையோர பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது. எனினும், அந்த அனுமதியை பயன்படுத்தி 405 சதுர அடி பரப்பளவு கொண்ட நிரந்தர கட்டிடம், மேலும் மூன்று கூடுதல் குடிசைகள் மற்றும் நிரந்தர வேலி ஆகியவை அனுமதி இன்றி அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுமாறு திணைக்களம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு முன்கூட்டியே அறிவித்திருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 04 ஆம் திகதி அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டிருந்தன. அந்நேரத்தில், விகாராதிபதி துறைமுக பொலிஸ் நிலையத்தை அணுகி, அவர்கள் மூலம் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒரு வார அவகாசம் கோரியிருந்தார். அதன் பின்னர் அனுமதி இன்றி அமைக்கப்பட்டிருந்த மூன்று கூடுதல் குடிசைகள் அகற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

