இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பான தகவல்களை அடுத்து, தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் மற்றும் மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
La France Insoumise (LFI) மற்றும் New Ecological and Social People’s Union (NFP) ஆகிய அரசியல் கூட்டமைப்புகளைச் சேர்ந்த பலர், பிரான்ஸ் தேசிய சபையின் உறுப்பினர்களாகும். இவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு செய்திக்குறிப்பில், தமிழர் மக்களுக்கு பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடந்துவரும் மனித உரிமை மீறல்களை கண்டித்ததுடன், நியாயம், உண்மை மற்றும் நட்டஈடு கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.
“போரின் இறுதிக் காலங்களில், இலங்கை அரசாங்கத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சில ஆய்வுகளின்படி, இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இது மிகக் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்ட எண்ணிக்கையாகவே இருக்கலாம்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் அரசு, தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும் மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்களை உள்நாட்டில் முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் நம்பகமான நீதித்தொடர்புகளை ஆதரிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

