திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையைப் பற்றி மக்கள் பேச ஆரம்பிப்பது பெரும்பாலும் ஒரு உயிரிழப்புக்குப் பிறகோ, மருத்துவ அலட்சிய குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவிய பிறகோ தான். ஆனால் அந்த வைத்தியசாலையின் உள்ளிருக்கும் உண்மை நிலைமை பற்றி தொடர்ந்து பேசப்படுவதில்லை.
இந்த மாவட்டத்தின் பிரதான அரச வைத்தியசாலை இன்று இயங்கிக் கொண்டிருப்பதே சில அர்ப்பணிப்புள்ள வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் மனிதநேயத்தால் தான் என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் அதிகமாக நிலவுகிறது. இல்லையெனில், நிர்வாக அலட்சியம், ஆளணி பற்றாக்குறை, கட்டுமான தாமதங்கள் மற்றும் திட்டமிட்ட இழுத்தடிப்புகள் காரணமாக இந்த வைத்தியசாலை நீண்டகாலமாகவே கடுமையான சேவை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.
சுகாதார அமைச்சரின் வருகையை முன்னிட்டு 05.09.2025 அன்று வைத்தியசாலையின் முன்பாக மக்கள் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் சுகாதார அமைச்சர் கௌரவ நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அருண் ஹேமச்சந்திரா, கௌரவ ரொஷான் அக்மீமன மற்றும் கௌரவ சண்முகம் குகதாசன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்ட மகஜரில்
1.வைத்தியசாலையின் தரத்திற்கேற்ப சத்திர சிகிச்சைக் கூடங்களும் தரம் உயர்த்தப்பட வேண்டும்
2.சிற்றூழியர்களின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
3.களங்களின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
4.வைத்தியர்களுக்கான விடுதி வசதிகள் வேண்டும்.
6.நோயாளிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும்
7.மகப்பேற்றுக்காக கட்டப்பட்ட சத்திரசிகிச்சைக்கூடம் இயக்கப்பட வேண்டும்
8.எலும்பு முறிவுக்காக தனியான தனியான களம் வேண்டும்.
9. ஒரு திடீர் மரண விசாரணை அதிகாரி போதாது.
10.பிண அறையில் வேலை செய்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்.
11. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள A&E கட்டடம் திறக்கப்பட வேண்டும்.
12. பிரசவத்திற்காக வரும் தாய்மார்களை தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள்
போன்ற பல கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டிருந்தும் இன்றுவரை எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் குறித்த பொறுப்புவாய்ந்த தரப்புகளால் எடுக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
குறிப்பாக எலும்பு முறிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் நிலை மிக மோசமானதாக கூறப்படுகிறது. உடனடியாக செய்யப்பட வேண்டிய சத்திரசிகிச்சைகளுக்கே வாரங்களும் மாதங்களும் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதை சரிசெய்ய சில வைத்தியர்கள் தனிப்பட்ட முயற்சியில் நிதி பெற்றுவந்து புதிய வசதிகளை உருவாக்க முயன்றபோதும், அதற்கும் நிர்வாக மட்டத்தில் எதிர்ப்பு ஏற்பட்டதாக வெளியாகும் தகவல்கள் மிகவும் கவலைக்குரியவை.
ஒரு அரச வைத்தியசாலையில் கட்டுமானங்களை தடுக்க முயற்சிப்பது, கிடைத்த நிதியை திருப்பி அனுப்புவது, திறக்கத் தயாரான கட்டடங்களை திறக்காமல் இழுத்தடிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் சாதாரண நிர்வாகப் பிழைகளாக எடுத்துக்கொள்ள முடியாதவை. இதிலும் ஆபத்தானது என்னவெனில், தவறுகளை சுட்டிக்காட்டும் வைத்தியர்கள் மீது அழுத்தங்கள் செலுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளே. திறமையாக செயற்படும் மருத்துவர்கள் விரக்தியடைந்து மாவட்டத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளமையின் எதிர்மறையான விளைவை சந்திக்கப்போவது அதிகாரிகளன்றி சாதாரண மக்கள் தான் என்பதை உணர்ந்தாக வேண்டும்.
திருகோணமலை போன்ற மாவட்டங்களில் சுகாதார சேவை என்பது இன,மத, அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து பொதுமக்களுக்குமான வாழ்வாதார உரிமை. ஆனால் இந்தளவிலான குறைபாடுகள் இருந்தும், மக்கள் மத்தியில் நீண்டகால ஒருங்கிணைந்த அழுத்தம் உருவாகாதது மிகவும் ஆழமான சமூக அரசியல் பிரச்சினையைக் காட்டுகிறது.
அதிகாரிகளின் அலட்சியத்தை விட அதற்கு பழகிக்கொண்ட சமூக மனநிலையே மிக ஆபத்தானது. “இது இங்கே எப்போதும் இப்படித்தான்” என்ற ஒதுங்கிக் கொள்ளும் மனநிலை தான் இந்த அமைப்புகளை மேலும் பொறுப்பற்றவைகளாக மாற்றுகிறது. ஒரு சமூகத்தின் அரசியல் பலவீனம் தேர்தல் வாக்குகளில் மட்டுமல்லாமல் அதன் மக்கள் தமது அடிப்படை வசதியான தரமான வைத்தியசாலைக்காக கூட தொடர்ந்து குரல் கொடுக்க முடியாதபோது தான் மிகத் தெளிவாக புலப்படுகிறது.
இன்று திருகோணமலை மக்கள் தம்மைத் தாமே கூட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி:
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் இந்த நிலைமைக்கான பொறுப்பு அதிகாரிகளுக்கு மட்டுமானதா?
அல்லது இதைச் சாதாரணமாக கடந்துசெல்லும் திருகோணமலைச் சமூகத்திற்கும் பொறுப்பு இருக்கிறதா?

