இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பாடசாலை மாணவர்களுக்கான பிரம்மாண்டமான விவாத அரங்கம் ஒன்று தமிழர் தலைநகரில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி 1.30 முதல் திருகோணமலை (Trincomalee) உவர்மலை விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் இந்த விவாத அரங்கம் நடைபெறவுள்ளது.
கிழக்கிலங்கையின் தமிழ் விவாத மன்றம் ஏற்பாடு செய்துள்ள ”தர்க்கச்சூழல்” விவாத அரங்கின் இரண்டாவது போட்டி வழக்காடு மன்ற முறையிலும் இறுதிப்போட்டி நாடாளுமன்ற விவாத முறையிலும் இடம்பெறும்.
இரண்டாவது போட்டி ”குற்றவாளிக் கூண்டில் சாதியம்” எனும் தலைப்பிலும் இறுதிப்போட்டி ” இந்த அவையானது இன்று வரை தமிழர்கள் தமக்கான தீர்வைப் பெற முடியாமல் போராடுவதற்கான அடிப்படைக் காரணம், தமிழ் அரசியல்வாதிகளின் வரலாற்றுத் தவறுகளே என்று நம்புகின்றது” என்ற அடிப்படையிலும் விவாதிக்கப்படவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கின் மாணவ மாணவிகள் பங்குபற்றும் பிரமாண்டமான விவாத அரங்கை கண்டு களிக்க விழா ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் அழைத்து நிற்கின்றனர்.