வடக்கு கிழக்கில் அதிகரித்துவரும் காணி அபகரிப்பு மற்றும் இராணுவ பிரசன்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை (18) தமிழரசுக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கடையடைப்பு மற்றும் கர்த்தாலுக்கு தமிழ் பேசும் மக்களின் ஆதரவைக்கோரி நேற்று (16) திருகோணமலை மூன்றாம் கட்டை சந்திப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், நகரசபை முதல்வர் க.செல்வராஜா, பட்டணமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் வெ.சுரோஸ்குமார் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.பசீர் உள்ளிட்டோர் பங்குகொண்டு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து கடை உரிமையாளர்களின் ஆதரவை கோரியிருந்தனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் விடுக்கப்பட்டுள்ள கடையடைப்பு மற்றும் கர்த்தாலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைமைகளும் தமது பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தமது பூரண ஆதரவை வழங்கி எதிர்வரும் திங்கட்கிழமை (18) முழுமையான கதவடைப்புக்கும் கர்த்தாலுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும், வர்த்தக சங்கங்கள், மீனவ சங்கங்கள், முச்சக்கரவண்டி சங்கங்கள் உள்ளிட்ட பல சங்கங்கள் இதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் திருகோணமலை மாநகர சபை முதல்வர், பட்டணமும் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

அதேபோன்று இந்த அரசிலும் வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பு, இராணுவ மயமாக்கல், படுகொலைகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கதவைடைப்பு மற்றும் கர்த்தால் நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைமை பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில் வடகிழக்கில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினுடைய பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் உறுப்பினர் அப்துல் லதீப் முகமட் பசீர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.