லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் கருத்து தமக்கு அதிஷ்டலாபச்சீட்டு விழுந்ததைப்போன்று இருப்பதாக வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை வழங்குவதற்கு பாதிக்கப்பட்ட தரப்பினர், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், புலம்பெயர் தமிழர்கள் என சகல தரப்பினரும் இச்சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அத்தோடு, யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் அங்கு நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சோமரத்ன ராஜபக்ஷவின் வெளிப்படுத்தல்கள் தமக்கு அதிஷ்டலாபச்சீட்டு விழுந்ததைப்போன்று இருப்பதாகவும், இச்சந்தர்ப்பத்தைத் நீதிகோரிப்போராடும் சகல தரப்பினரும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “சோமரத்ன ராஜபக்ஷவின் கருத்து எமக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இதனைப் பாதிக்கப்பட்ட தரப்பினரும், தமிழ்த்தேசிய அரசியல் பிரதிநிதிகளும், சிவில் சமூக அமைப்புக்களும், புலம்பெயர் தமிழர்களும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இதுபற்றி சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளிடம் எடுத்துரைப்பதுடன் சர்வதேச நீதி விசாரணைக்குப் பரிந்துரைக்குமாறு அவர்களிடம் கோரவேண்டும். எனெனில் அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணையை நோக்கிச் செல்லப்போவதில்லை.
ஆகவே இவ்விடயத்தில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள சகல தரப்பினரும் வழங்கவேண்டும்.” என்றார்.