திருகோணமலை மக்கேசர் (MC Hazer) மைதானத்தில் நடைபெற்ற கிழக்கின் முதுநிலை வீரர்களின் சமர் 2026 (Battle of East Masters 2026) கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்ததையடுத்து, திருகோணமலை சுப்பர் 40 (TS40) மற்றும் மட்டக்களப்பு மாஸ்டர்ஸ் அணிகள் கூட்டுச் சம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்றதுடன், விளையாட்டுணர்வு, நட்புறவு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாநகர சபை உறுப்பினர் மேஜர் எஸ். செல்வராஜா கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதியாக தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு. குமார் ஜெயக்குமார் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
நான்காவது ஆண்டாக நடைபெற்ற இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து வீரர்கள், நடுவர்கள், அனுசரணையாளர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
“கிரிக்கெட்டின் உண்மையான நட்பே வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் கூட்டுச் சம்பியன்களாக கௌரவிக்கப்பட்டுள்ளதன் மூலம், இறுதியில் வெற்றி பெற்றது கிரிக்கெட் விளையாட்டே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது” என திருகோணமலை சுப்பர் 40 கிரிக்கெட் கழகம் தெரிவித்துள்ளது.

