திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு, இன்று (17.06.2026) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பத்து பேருக்கு, கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளின் கீழ் பிணை வழங்கியிருந்தது.
மேல் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, எதிராளிகள் அனைவரும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், 10,000 ரூபா காசுப்பிணையிலும் விடுவிக்கப்பட்டனர். மேலும், வழக்கு முடிவுறும் வரை நீதிமன்றத்தில் நடைபெறும் அனைத்து தவணைகளிலும் தவறாது முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2025 நவம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் கடலோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், புத்தர் சிலை நிறுவப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் கீழ், சாட்சிகளுக்கு எவ்வித அச்சுறுத்தலோ இடையூறோ ஏற்படுத்தக்கூடாது என்பதுடன், பொது அமைதி மற்றும் சமய நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத் தீர்மானம் குறித்து பல்வேறு தரப்பினரும் அவதானத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

