திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி உயிரியல், பொறியியல், வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் மாவட்டத்தின் முதல் நிலையை கைப்பற்றியுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியானது உயிரியல், பொறியியல் பிரிவுகளில் மாவட்டத்தின் முதல் நிலையை பெற்றுக் கொண்டுள்ளதோடு வர்த்தகப் பிரிவில் முதல் மூன்று நிலைகளையும் பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது.
அந்த வகையில் உயிரியல் துறையில் செல்வி. தர்ஷனா கோணேஸ் “3ஏ” பெறுபேற்றைப் பெற்று திருகோணமலை மாவட்டத்தில் முதல் இடத்தையும், அகில இலங்கை ரீதியாக மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார். இவர் 2023 க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9A பெறுபேற்றைப் பெற்று அகில இலங்கை ரீதியில் 6ஆவது இடத்தைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று பொறியியல் துறையில் செல்வி. ஜஷிகா ராஜூ “3ஏ” பெறுபேற்றைப் பெற்று திருகோணமலை மாவட்டத்தில் முதல் இடத்தையும், வர்த்தக பிரிவில் எம்.கீர்த்தனா, பரணிதஸ்ரீ, தவிஷனா ஆகியோர் முறையே மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளனர்.
அத்துடன் இம்முறை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் இருந்து மருத்துவத்துறைக்கு 6 மாணவர்களும், பொறியியல் துறைக்கு 7 மாணவர்களும் தெரிவாகவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதேவேளை மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட அல்ஹிதாயா மகாவித்தியாலய மாணவி கே.எல்.ஐூனைட் பர்ஹத் ஹயா கலைப்பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

